top of page

ஊழல் என்னும் கொடூர நோய் – சுவி.பாபு T தாமஸ்!




பண ஆசையே எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது, சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தை விட்டு வழுவி, அநேக வேதனைகளால் தங்களை உருவக் குத்திக் கொண்டிருக்கிறார்கள். I தீமோத்தேயு : 6 : 10.


ஆசையே தீமைக்கு வேர் :


தீமைக்கு வேர் எது என்று அனைவருக்கும் தெரியும், தெரிந்திருந்தாலும் ஏராளம் ஏராளமானவர்கள் சூழ்நிலைக் குற்றவாளிகளாக தொடர்ந்து இருக்கும் இடத்திலேயே இருந்து உழன்று உழன்று அழிவைத் தேடிக் கொள்ளுகிறார்கள். இன்னும் பலர் பண ஆசையையே ஒரு கொள்கையாகவே கொண்டு பணம், சொத்து சேர்ப்பதிலேயே கவனம் வைத்து எவ்வழியாயினும் சேர்ப்பது ஒன்றே குறியாக வாழ்ந்து அழிவைத் தேடிக்கொள்ளுகிறார்கள். இந்த பொருளாசையை இச்சித்து ஏராளமானவர்கள் தொடர்ந்து தொடர்கதையாய் அழிந்தார்கள், அழிந்துக்கொண்டிருக்கிரார்கள். பொருள் சேர்ப்பதில் தவறா என்ன? ஆனால் அதற்காக ஒரு நேர்மை, தருமம், நியாயம் வேண்டுமல்லவா? அவர்கள் இச்சித்து சேர்த்த பொருள் அவர்களை அழிவிலிருந்து காப்பாற்றவில்லை என்று பார்த்தவர்கள், அப்படிப் பார்த்தவர்கள், கேட்டவர்கள் யாரும் உணர்ந்துக்கொள்ளவில்லை. மாறாக அதையே தொடர்ந்து செய்வதில் குறியாய் பறக்கிறார்கள், ஏன் என்று புரியவில்லை. இதற்கான பதிலை பரிசுத்த வேதாகமம் இப்படிச் சொல்லுகிறது, பொருளாசையுள்ள எல்லாருடைய வழியும் இதுவே, இது தன்னையுடையவர்களின் உயிரை வாங்கும். நீதிமொழிகள் : 1 : 19. பெரிய பெரிய அரசியல் பின்புலம் உள்ளவர்களும் இதற்கு விலக்கில்லை, ஏழை பணம் படைத்தவன், படித்தவன் மெத்தப்படித்தவன் என்ற வேறுபாடு இல்லை. எல்லோரும் ஒன்று போலவே செயல் படுகிறார்கள், எல்லோருடைய முடியும் ஒன்றாகவே இருக்கிறது. ஒருவருக்கும் இவைகள் எந்த வித படிப்பினையையும் தரவில்லை. ஆனால் பொருளை சேர்ப்பதில் உள்ள மோகம் குறைந்தபாடில்லை, இன்னும் இன்னும் என்று பாதாளம் விழுங்குவது போல் தீராத பசியை ஆற்ற எல்லையை மீறிய யுக்திகளை கையாண்டு சேர்க்க துடிக்கிறார்கள். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும் என்ற பழமொழிக்கேற்ப மிதமிஞ்சிய செல்வ பெருக்கமும் அதை ஈட்ட எடுத்த பெரும் பிரயத்தனங்களின் கலவையினாலான நஞ்சும் ஏழ்ஏழு ஜென்ம சாபமாக வந்து விடிகிறது. நியாயமாய் வராத எந்தப் பொருளும் தலைமுறை தலைமுறைகளுக்கான பெரும் சுமை என்று யாரும் நினைப்பதில்லை. ஊழல் சங்கிலி தொடராய் சமுதாயத்தில் ஆழமாய் பதிந்து விட்டது


இதை புரிந்தவன் தான் ஞானி. துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமலும், பாவிகளுடைய வழியில் நில்லாமலும், பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராமலும், கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான். சங்கீதம்:1:1-2. பாக்கியவான் அல்லது ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் யார் என்பதற்கான சான்று தான் பரிசுத்த வேதாகமம் சொல்லுவது என்பதை நாம் புரிந்துக்கொள்ளவேண்டும். பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன். ரோமர் : 6 : 23. இந்த வார்த்தைகள் நமக்கு ஒரு உண்மையை வெளிப்படுத்துகிறது, என்னவென்றால் பாவத்தின் சம்பளம் மரணம் அதேவேளையில் நித்திய நித்தியமான வாழ்வை சுதந்தரிக்க வேண்டுமானால் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து ஒருவரே வழி. இந்த வழியில் நாம் பயணிக்க வேண்டுமானால் பாவத்தை தவிர்த்து சத்தியத்தை கைகொண்டு நடந்தால், அப்பொழுது ஆசிர்வாதமாய் இருப்போம் என்று வசனம் நமக்குச் சொல்லுகிறது. தேவனாகிய கர்த்தர் ஈசாக்கை பார்த்து சொல்லுகிறார், நான் உன் சந்ததியை வானத்தின் நட்சத்திரங்களைப்போலப் பெருகப்பண்ணி, உன் சந்ததிக்கு இந்தத் தேசங்கள் யாவையும் தருவேன்; உன் சந்ததிக்குள் பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும் என்றார். ஆதியாகமம் : 26 : 5. இந்த ஆசிர்வாதம் உலகில் அருளப்படும் ஆசீர்வாதங்களுக்கெல்லாம் பெரிதான ஆசீர்வாதமாக கருதக் கூடியது. ஆனால் கர்த்தர் இந்த ஆசீர்வாதத்திற்கு அவர் கூறும் காரணம் மிகவும் ஆச்சரியமானது, அதே நேரம் அலாதியாயனது. ஆபிரகாம் என் சொல்லுக்குக் கீழ்ப்படிந்து, என் விதிகளையும், என் கற்பனைகளையும், என் நியமங்களையும், என் பிரமாணங்களையும் கைக்கொண்டபடியினால், ஆதியாகமம் : 26 : 4. என்று தெரிவிக்கிறார். இது தான் வாழ்க்கை, இந்த வாழ்க்கை வாழவே நாம் அனைவரும் பிரயாசப்பட வேண்டும் என்று தேவன் நமக்கு வலியுறுத்துகிறார்.


உலகப் பாதை வேறு :


உலகமும் அதிலுள்ளவைகள் அனைத்தும் அழிவுக்கே நம்மை அழைத்துச் செல்லும் என்பது தான் நிஜம். பூமியில் உருவான எந்த உயிரினமானாலும், பொருளானாலும் அனைத்தும் அழியக்கூடியது. உற்பத்தி செய்யக்கூடிய பொருட்களைக் கூட இன்னும் துரிதமாய் அழியக்கூடிய தாகவே உருவாக்குகிறார்கள். ஆனால் ஆண்டவர் மனித இனத்திற்கு மட்டுமே நித்திய வாழ்வு உண்டு என்று சொல்லுகிறார். இதை உறுதி படுத்தும் வண்ணமாகவே இயேசு கிறிஸ்துவானவர் நம்முடைய பாவங்களுக்காக, நம்மை பாவத்திலிருந்து மீட்பதற்காக சிலுவையில் இரத்தம் சிந்தி மரித்தார். அவர்களில் சிலர் பரிசேயரிடத்தில் போய், இயேசு செய்தவைகளை அவர்களுக்கு அறிவித்தார்கள். அப்பொழுது பிரதான ஆசாரியரும் பரிசேயரும் ஆலோசனைச் சங்கத்தைக் கூடிவரச்செய்து: நாம் என்ன செய்கிறது? இந்த மனுஷன் அநேக அற்புதங்களைச் செய்கிறானே. நாம் இவனை இப்படி விட்டுவிட்டால், எல்லாரும் இவனை விசுவாசிப்பார்கள்; அப்பொழுது ரோமர் வந்து நம்முடைய ஸ்தானத்தையும் ஜனத்தையும் அழித்துப்போடுவார்களே என்றார்கள். அப்பொழுது அவர்களில் ஒருவனும் அந்த வருஷத்துப் பிரதான ஆசாரியனுமாகிய காய்பா என்பவன் அவர்களை நோக்கி: உங்களுக்கு ஒன்றுந் தெரியாது; ஜனங்களெல்லாரும் கெட்டுப்போகாதபடிக்கு ஒரே மனுஷன் ஜனங்களுக்காக மரிப்பது நமக்கு நலமாயிருக்குமென்று நீங்கள் சிந்தியாமலிருக்கிறீர்கள் என்றான். இதை அவன் சுயமாய்ச் சொல்லாமல், அந்த வருஷத்துப் பிரதான ஆசாரியனானபடியினாலே இயேசு யூதஜனங்களுக்காக மரிக்கப்போகிறாரென்றும், அந்த ஜனங்களுக்காகமாத்திரமல்ல, சிதறியிருக்கிற தேவனுடைய பிள்ளைகளை ஒன்றாகச் சேர்க்கிறதற்காகவும் மரிக்கப்போகிறாரென்றும், தீர்க்கதரிசனமாய்ச் சொன்னான். யோவான் : 11 : 46 – 52. அதேச்சமயம் இயேசு கிறிஸ்து மூன்றாம் நாளில் உயிரோடு எழுந்தது மற்றும் அதின் உண்மையான அர்த்தம் என்னவென்றால் இயேசு கிறிஸ்து உயிரடைந்தது போல் நாம் அனைவரும் அதாவது கிறிஸ்துவுக்குள் மரிக்கிறவர்கள் அனைவரும் உயிர் பெறுவார்கள் என்பதை மனுக்குலத்திற்கு அடையாளமாக அறிவிக்கவே அப்படியாயிற்று.


இதில் ஒருவருக்கும் சந்தேகம் வேண்டுவதே இல்லை. ஒரு தூதன் பாதாளத்தின் திறவுகோலையும் பெரிய சங்கிலியையும் தன் கையிலே பிடித்துக்கொண்டு வானத்திலிருந்திறங்கிவரக்கண்டேன். பிசாசென்றும் சாத்தானென்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய வலுசர்ப்பத்தை அவன் பிடித்து, அதை ஆயிரம் வருஷமளவுங் கட்டிவைத்து, அந்த ஆயிரம் வருஷம் நிறைவேறும்வரைக்கும் அது ஜனங்களை மோசம்போக்காதபடிக்கு அதைப் பாதாளத்திலே தள்ளியடைத்து, அதின்மேல் முத்திரைபோட்டான். அதற்குப் பின்பு அது கொஞ்சக்காலம் விடுதலையாகவேண்டும். அன்றியும், நான் சிங்காசனங்களைக் கண்டேன்; அவைகளின்மேல் உட்கார்ந்தார்கள்; நியாயத்தீர்ப்புக் கொடுக்கும்படி அவர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது. இயேசுவைப்பற்றிய சாட்சியினிமித்தமும் தேவனுடைய வசனத்தினிமித்தமும் சிரச்சேதம்பண்ணப்பட்டவர்களுடைய ஆத்துமாக்களையும், மிருகத்தையாவது அதின் சொரூபத்தையாவது வணங்காமலும் தங்கள் நெற்றியிலும் தங்கள் கையிலும் அதின் முத்திரையைத் தரித்துக்கொள்ளாமலும் இருந்தவர்களையும் கண்டேன். அவர்கள் உயிர்த்து கிறிஸ்துவுடனேகூட ஆயிரம் வருஷம் அரசாண்டார்கள். மரணமடைந்த மற்றவர்கள் அந்த ஆயிரம் வருஷம் முடியுமளவும் உயிரடையவில்லை. இதுவே முதலாம் உயிர்த்தெழுதல். முதலாம் உயிர்த்தெழுதலுக்குப் பங்குள்ளவன் பாக்கியவானும் பரிசுத்தவானுமாயிருக்கிறான்; இவர்கள்மேல் இரண்டாம் மரணத்திற்கு அதிகாரமில்லை; இவர்கள் தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் முன்பாக ஆசாரியராயிருந்து, அவரோடேகூட ஆயிரம் வருஷம் அரசாளுவார்கள். வெளி : 20 : 1 – 6. வேத வசனங்கள் இப்படியாக நமக்கு தெளிவாக தீர்க்கமாக மரணத்திற்குப் பின் நடப்பவை அனைத்தையும் வெளிப்படையாக தெரிவித்திருக்க, நாம் அதை கண்டும் காணாமல் இருப்பது எப்படி. நம்முடைய வாழ்க்கையை சீர்படுத்தாமல் உலகம் போகிற போக்கில் சத்தியத்தை அறிந்த நாமும் வாழ்ந்தால் எப்படி? என்பதை சற்று சீர் தூக்கி பார்ப்பது நமக்கு நன்மை.


ஆகவே, இன்றே இப்போதே இந்த நொடி பொழுதே நாம் எப்படி பயணிக்கிறோம், எதை நோக்கிய பயணம் நமது என்பதை தெளிவுப்படுத்திக் கொள்ளுவோம். காலம் மிக குறைவும் என்றும் அதே வேளையில் ஆண்டவரின் வருகை மிக சமீபம் என்பதை உணர்ந்து தெளிந்து முடிவுகள் எடுக்கும்போது நமக்கான மாற்றங்கள் நிச்சயம் நமக்கு உண்டு என்று நம்பி செயல் படுவோம், ஆமென்.


சுவி. பாபு T தாமஸ், நமது மேய்ப்பரின் குரல் ஊழியங்கள், இராணிப்பேட்டை. Evg.Babu T Thomas, Our Shepherd’s Voice Foundation, Ranipet – Tamil Nadu, India. https://ourshepherdsvoice.wixsite.com/mysite





Featured Posts
Check back soon
Once posts are published, you’ll see them here.
Recent Posts
Archive
Search By Tags
No tags yet.
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square
bottom of page